Friday, June 2, 2017

52- திருப்புளிங்குடி (நவ திருப்பதி)



தூத்துக்குடி மாவட்டத்தில், வரகுணமங்கையிலிருந்து கிழக்கே ஒரு மைல் தூரத்தில் உள்ளது இத் தலம்.

மூலவர் - பூமிபாலகர்
உற்சவர் - காய்சின வேந்தர் (காசினி வேந்தர்)

தாயார் - மலர்மகள் நாச்சியார்,பூமிப்பிராட்டி

தீர்த்தம்- இந்திர தீர்த்தம், நிர்ருதி தீர்த்தம்

நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்.12 பாசுரங்கள் பாடியுள்ளார்.

இத்தலம் பற்றி பிரம்மாண்ட புராணத்திலும், தாமிரபரணி தலபுராணத்திலும் குறிக்கப் பெற்றுள்ளது.இத்தல இறைவன் காய்சின வேந்தர் (காசினி வேந்தர்), பூமிபாலகர் என்ற பெயர்களில் பள்ளிகொண்ட நிலையில் கிழக்கு நோக்கிய கோலத்துடன் காணப்படுகிறார்.

இறைவியின் பெயர் மலர் மகள் நாச்சியார்

நவக்கிரககளில் வியாழனோடு சம்பந்தப்பட்டத் தலமாகும்

இத்தலத்தில் உள்ள லட்சுமி தேவி, பூமிபிராட்டி ஆகியோரின் திருவுருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிக மிகப் பெரியவைகள்.தவிர்த்து, வேறு கோயில்களில் காணமுடியாக் காட்சியாக பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும் தாமரைக் கொடி, சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது போன்ற அரியக் காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது

சயனக் கோலத்தில் உள்ள திருமாலின் ஒரு பாதத்தை கருவறையைச் சுற்றி வருகையில் வடக்குப்புற சுவற்றின் வெளிப்புறமுள்ள ஒரு சன்னலின் வழியாகச் செவிப்பதற்கு ஏற்றாற்போல அமைந்துள்ள இக்கட்டிட அமைப்பு பிற தலங்களில் அமையப்பெறாததாகும்

No comments:

Post a Comment